Showing posts with label ithu saththiyam.... Show all posts
Showing posts with label ithu saththiyam.... Show all posts

Sunday, 19 August 2012

Ra.Ki.Rangarajanum punai peyarkalum, nettil vanthathu

” - ஹம்ஸா’ என்ற பெயரில் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியதும், துரைசாமி என்ற பெயரில் துப்பறியும் கதைகள் எழுதியதும் ரங்கராஜன்தான். அது தவிர, சூர்யா, 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' போன்ற பல புனை பெயர்களில் அவர் நிறைய எழுதியிருக்கிறார். கிருஷ்ணகுமார் என்ற புனைபெயரில் ”கோஸ்ட்”, ”எனக்குள் ஒரு ஆவி” போன்ற தலைப்புகளில் இவர் எழுதிய அமானுஷ்யத் திகில் தொடர்கள் அக்காலவாசகர்களால் மறக்க இயலாதவை. மொழிபெயர்ப்பிலும் சாதனை படைத்திருக்கிறார். புகழ்பெற்ற நாவலான பாபிலானை பட்டாம்பூச்சி என்றும், இன்விசிபிள் மேனை கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான் என்றும் தொடர்களாக எழுதியிருக்கிறார். காதல் மேல் ஆணை (டேனியல் ஸ்டீல்), லாரா (ஷிட்னி செல்டன்), ஜெனிபர் போன்றவை வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. ஷிட்னி செல்டன் தமிழகத்தில் பலருக்குத் தெரியக் காரணம் ரா.கி.ரங்கராஜன்தான் என்று சொன்னால் அது மிகையில்லை. - “
பத்திரிகையாளராக, ‘சக்தி’யில் பணியைத் தொடங்கி, தம் வித்தக எழுத்துகளால், தமிழ்மக்களின் இதயம் நிறைந்த ரா.கி.ரங்கராஜன், தம் பெயரை மறைத்துக் கொண்டு, தம் முகத்தையும் வெளிப்படுத்தாமல், 42 ஆண்டுகளாக, குமுதம் ஆசிரியர் குழுவில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாகப் பணி ஆற்றியவர். அதில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், எழுத்தின் மேல் கொண்ட தணியாத காதலால், எழுதுவது எப்படி? என்று, இளம் எழுத்தாளர்களுக்கு, எழுத்துக்கலையைக் கற்றுத்தர நூல் எழுதியவர்.
குமுதத்தின் புகழ்பெற்ற அரசு பதில்களில், நடுநாயகமான ‘ர’ என்ற எழுத்துக்குச் சொந்தக்காரர்தான், நம்முடைய ரங்கராஜன். குடந்தையில் பிறந்து, தமிழ் அன்னையின் மீது தணியாத பற்றுக்கொண்டு, காலமெல்லாம் எழுதிக் குவித்தவர். இவருடைய எழுத்து ஓவியத்தில் புகழ் பெற்றவை திரைப்படமாக வந்த இது சத்தியம், சுமைதாங்கி, போன்ற காலத்தை வென்ற காவியங்கள் ஆகும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், அடையாறு புற்று நோய் மருத்துவமனையில், தாம் இறப்பதற்கு முன்பு கடைசியாக வாசித்துக் கொண்டு இருந்த, தி மாஸ்டர் கிறிஸ்டியன் என்ற மேரி கோரெல்லியின் நாவலை மொழிபெயர்த்து, அண்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில், குமுதம் இதழில் வெளியிட்டார். உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை வரலாறையும் எழுதினார். இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, தன்னம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் எழுதி வந்தார். அவரது எழுத்தில் இழையோடும் நகைச்சுவை, வயிறு குலுங்க வைக்கும். 

தம் பெயரை மறைத்துக் கொள்வதற்காக, மோகினி, சுந்தர பாகவதர், சூர்யா, ஹம்சா, துரைச்சாமி, கிருஷ்ணகுமார், மாதவி, வினோத் என்று அவ்வப்போது தோன்றிய பெயர்களில் எல்லாம் தன் படைப்புகளை வெளியிட்ட ரங்கராஜன், தம்முடைய உண்மை முகத்தையும், பெயரையும் வெளிப்படுத்தியதே இல்லை. இப்படி புகழை விரும்பாத, ஒரு பற்று அற்ற ஞானியாக வாழ்ந்து மறைந்து உள்ள ரா.கி.ரங்கராஜன், தமிழ் எழுத்து உலகை அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேல் அழகுபடுத்திய பெருமகன் ஆவார். 

அன்னாரது மறைவு, தமிழ் எழுத்து உலகத்துக்குப் பேரிழப்பு. அவர் உடலால் மறைந்தாலும், தம்முடைய எழுத்துகளால் தமிழ் அவர் ஏற்றி வைத்த இலக்கியச்சுடர் என்றும் அணையாது.