Friday 21 September, 2012

flight No.6E-279..தொடர்ச்சி ....



தொடர்ச்சி ....
ஓடு பாதையிலேயே நல்ல உயரத்திற்கு சென்ற விமானம், இடது இறக்கையை  கீழிறக்கி சர்ரென்று திரும்பியது..கீழே தண்ணீர், சற்று நேரத்தில் கடலுக்கு மேலே. பத்து நிமிடத்தில் வெண் மேக கூட்டத்திற்கு மேலே, இன்னும் மேலே.......இனி வேடிக்கை பார்க்க ஒன்றுமில்லை..கீழே மேக கூட்டம் .தொலைவில் நீல நிறத்தில் வானமா, கடலா? 
பெல்டை விடுவித்துவிட்டு ரெஸ்ட் ரூம் போக ஒரு கூட்டம் அலை மோதியது. 
அது அடங்கியதும், தள்ளு வண்டியில் காபி, மினி தோசை, என்று வந்ததை வேண்டியவர்கள்  வாங்கி உள்ளே தள்ள ஆரம்பித்தார்கள்.
இந்த உணவெல்லாம் நமக்கு ஒத்து வராது..எடுத்து வந்தால் சாப்பிட அனுமதிப்பார்களோ,மாட்டார்களோ என்ற சந்தேகத்தில் 
உணவு எதுவும் எடுத்து வராததால் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.
 "விமானியின் அறிவிப்பில்,பறந்து கொண்டிருப்பது 10 ஆயிரம் மீட்டர்(33,000-அடி)உயரத்தில்,விமானத்தின் வேகம் மணிக்கு-800 கிலோமீடர் என்பதும்,வானிலை சாதாரணமாக இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. 
திருப்பதிமலையையும் அடுத்து, நீர்த்தேக்கத்தை பார்க்கவும்,சீட் பெல்டை போட்டுகொள்ளவும், எலக்ட்ரானிக் சாதனங்களை அணைக்க சொல்லி அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது.
புழல் ஏரியை நெருங்கும்போது மிக கீழே பறக்க ஆரம்பித்த விமானம் திருவொற்றியூர் தாண்டி, கடலில் வெகு தூரம் சென்று வலது பக்கம் திரும்பி, திருவல்லிக்கேணி மயிலை (பறக்கும் ரயில்-மிக அழகாக)வழியாக அடையார் பிரிட்ஜ்,கிண்டி பாலம், கத்தி பாரா, ராணுவ இடத்தின் பசுமையான பகுதியை தாண்டி, இன்னும் கீழே, கீழே, "தட்"டென்று ஓடுபாதையில் டயர்களை இறக்கி இறக்கையின் மேல்பகுதி முழுவதுமாக திறக்கப்பட்டது.
ஒவ்வொரு இஞ்சினாக அணைத்து, வேகத்தை குறைத்து........ஓடு பாதையில் ஓடி சரியாக நிறுத்த வேண்டிய 
இடத்தில் நின்றது. 
இறங்குவதற்கு அவசரப்படும் கூட்டத்தில் முட்டி மோதாமல், அமைதியாக அமர்ந்திருந்தேன்.கார்கோ வண்டி வந்து, கீழே கதவு திறக்கப்பட்டு பெட்டிகள் அதில் ஏற்றப்படுவதை பார்த்தேன்.என் பெட்டி ஏற்றப்பட்டதை பார்த்து விட்டு எழுந்தேன்.
வெளியே வால்வோ பஸ்ஸில் மக்களுடன் கலந்து "காமராஜர் உள்நாட்டு விமான" நிலையத்தினுள் நுழைந்தேன்.
அரை மணி நேரம் காத்திருந்ததில் கன்வேயரில் பெட்டி வந்தது.எடுத்து நாய் குட்டியை இழுத்து வருவது போல் இழுத்து கொண்டு வெளியில் வந்தேன்.
கால் டாக்சிகாரன் அம்பத்தூருக்கு 750 ரூபா, பிக்ஸ்டு ரேட் என்றதும் "சரி" என்று 
ஏறி அமர்ந்தேன். வீட்டிலிருந்து போன்....."சென்னை வந்துட்டேன்,சமைச்சு வை,கொலை பசி".என்றேன்.

No comments: